புதிய மனித இனம் கண்டுபிடிப்பு! இஸ்ரேல் ஆய்வாளர்கள் தகவல்
உலக வரலாற்று ஆய்வுகளில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத பூமியில் வாழ்ந்த ஆதி மனித இனம் வாழ்ந்ததற்கான அடையாளத்தை இஸ்ரேல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பானது ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் ஆதிமனிதனின் ஆராய்ச்சிகள் பல வரலாற்று உண்மைகள் இதன் மூலம் வெளிப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் நாட்டின் ராம்லா நகரில் ஜெருசலேமில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதன்போது இதுவரை மனித இனம் தொடர்பாக கிடைத்த தரவுகளில் கிடைக்காத ஆதி மனிதர்களுடைய மண்டை ஓடு மற்றும் தாடை பகுதி கிடைத்துள்ளது.
எனினும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்புகள் மற்றும் மண்டை ஒடுகளுடன் இவை ஒத்துப்போகவில்லை. இந்த ஆராய்ச்சி தொடர்பான ஆய்வுக்கட்டுரை சயின்ஸ் இதழில் வெளியாகியுள்ளது. அதில், டெல் அவிவ் மானுடவியலாளர்களும், ஆய்வை தலைமை ஏற்று நடத்திய தொல்பொருள் ஆய்வாளர் யோசி ஜைட்னர் ஆகியோர் ‘நேஷர் ராம்லா ஹோமோ’ இனம் என வகைப்படுத்தியுள்ளனர்.
ராம்லா நகரில் வாழ்ந்துள்ள இந்த ஆதி மனித இனத்தினர் அங்கு கடைசியாக வாழ்ந்திருக்கலாம் என கருதும் ஆய்வாளர்கள், சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஆண்டுகள் மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வாழ்ந்த காலப்பகுதியாக இருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை இந்த ஆதி மனித இனம் இப்போது இருக்கும் மனித இனத்துடன் துளியும் ஒத்துப்போகவில்லை என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தாடை, மண்டை ஓடு அமைப்பு வித்தியாசமாக இருப்பதுடன், நீண்ட பல் அமைப்பு இருப்பதாகவும் கூறியுள்ளனர். அதுமட்டுமன்றி ராம்லா நகரில் மனித எச்சங்கள் மட்டுமின்றி விலங்குகளின் எலும்புகள், கற்கருவிகளையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனித புதைபடிவங்களுடன் தொடர்புடைய கண்டுபிடிப்புகளில் நேஷர் ராம்லோ ஹோமோ இனத்தினர் மேம்பட்ட கற்கருவிகளை கொண்டிருப்பதாக தொல்பொருள் ஆய்வாளர் யோசி ஜைட்னர் கூறியுள்ளார்.
இதேவேளை இதற்கு முன்பு இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் சுமார் 4 லட்சங்கள் ஆண்டுக்கு முந்தையதாக இருந்ததாகவும், அந்த எச்சங்கள் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் நேஷர் ராம்லோ ஹோமோ எச்சங்களுடன் ஒத்துப்போக வாய்ப்பு இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில், நேஷர் ராம்லா ஹோமோ கண்டுபிடிப்பு, இதற்கு முன்பு ஐரோப்பியாவில் நியாண்டர்தால்கள் தோன்றியதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாட்டை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இஸ்ரேல் டெல் அவிவ் பல்கலைக்கழக மானுடவியலாளர் ஹெர்ஸ்கோவிச், இந்த கண்டுபிடிப்பு குறித்து பேசும்போது, தொடக்க காலத்தில் லெவன்ட் பகுதியில் நியாண்டர்தால்கள் இருந்ததாகவும், காலப்போக்கில் பிற மனித இனங்களுடன் சேர்ந்து ஐரோப்பிய பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் என தெரிவிக்கிறார்.
மேலும்
சிலர் கிழக்கு நோக்கி, அதாவது தற்போது இந்தியா, சீனா இருக்கும் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததாக கூறுகிறார்.