தாய்லாந்து விசா விதிகளில் அதிரடி மாற்றம் ; சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு
தாய்லாந்து அரசு தனது சுற்றுலா விசா விதிகளில் முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட 90-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதுவரை விசா இன்றி 60 நாட்கள் வரை தங்க அனுமதி பெற்றிருந்த நிலையில், அந்த கால அவகாசம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை தாய்லாந்தின் முக்கிய பொருளாதார துறையாக விளங்கி வரும் நிலையில், கொரோனா காலத்திற்குப் பிறகு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் குறைந்ததால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.
அதேசமயம், போதைப்பொருள் கடத்தல், பாலியல் தொழில், மற்றும் முறையான அனுமதியின்றி வெளிநாட்டவர்கள் விடுதிகள் மற்றும் பள்ளிகளை நடத்துவது போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் விசா விதிகளை மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதற்கமைய, நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய விதிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
புதிய மாற்றங்களின்படி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தங்கக்கூடிய கால அவகாசம் 60 நாட்களிலிருந்து குறைக்கப்பட்டு 30 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தாய்லாந்து சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய விதிகள் விரைவில் அமலுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.