ஜி ஜின்பிங் சர்வாதிகாரி: சீனாவில் வலுக்கும் எதிர்ப்பு
சீனாவின் ஜனாதிபதியாக ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக பதவியேற்பதற்கு எதிர்ப்பு வலுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் ஜனாதிபதி தெரிவுக்கான பொதுக்கூட்டமானது தலைநகர் பெய்ஜிங்கில் அக்டோபர் 16ஆம் திகதி முன்னெடுக்கப்பட உள்ளது. இதில் ஜி ஜின்பிங் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த முக்கியமான கூட்டத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் ஜி ஜின்பிங்கிற்கு பதவி நீட்டிப்பு கொடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி சாலையில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இது ஆளும் கட்சியின் தலைவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. பதாகைகளை வைத்தவர்களை சீன பொலிசார் தேடி வருகின்றனர். ஆனால் இதுவரை அதில் எவரையும் அடையாளம் காணப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்திற்கு முன்னதாக பெய்ஜிங்கின் ஹைடியன் மாவட்டத்தில் காணப்பட்ட பதாகையின் படம் சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதில், சாலை மேம்பாலத்தில் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக பதாகை ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளது. மாண்டரின் மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த பதாகையில், ஜி ஜின்பிங் ஒரு சர்வாதிகாரி என்றும், அவருக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.