உக்ரைனில் மாணவர் விடுதி மீது ட்ரோன் தாக்குதல் ; 18 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள மாணவர் விடுதி ஒன்றின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்டாரோபில்ஸ்க் நகரில் உள்ள கல்வியியல் கல்லூரி விடுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மாணவர்கள் தூங்கிக்கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தாக்குதலின் போது 5 மாடி கட்டடத்தின் மேல் தளங்கள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளிலிருந்து இதுவரை 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், “இது மன்னிக்க முடியாத பெருங்குற்றம். இதற்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு அவசர உத்தரவு வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும், இது தற்செயலானது அல்ல, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். ஆனால், ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அப்பகுதியில் இருந்த ரஷ்ய ராணுவத்தின் ட்ரோன் கட்டுப்பாட்டு மையத்தை இலக்காகக் கொண்டு மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யாவின் கோரிக்கையின் பேரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதேவேளை, ரஷ்யாவின் எண்ணெய் கட்டமைப்புகள் மீது உக்ரைன் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதற்கு பதிலாக உக்ரைனின் சுமி நகரில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவரின் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.