லண்டனில் போதை கும்பல் அட்டகாசம் ; பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் அதிர்ச்சி குற்றச்சாட்டு
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சில கிரிமினல் கும்பல்கள், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளை குறிவைத்து செயல்படுகின்றன என ஆங்கில ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, குறிப்பாக 15 வயதுக்குட்பட்ட சிறுமிகள் குறிவைக்கப்படுகின்றனர். பணம் மற்றும் விலை உயர்ந்த பரிசுகள் வழங்கி அவர்களை வலையில் இழுக்கும் கும்பல்கள், பின்னர் போதைப்பொருள் பழக்கத்திற்கும் அடிமையாக்குகின்றன என கூறப்படுகிறது.

சிறுமிகள் முழுமையாக அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற பின், வழங்கப்பட்ட பணத்தைத் திரும்ப கேட்டு மிரட்டுவதோடு, பணம் வழங்க முடியாதவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகள் தெரிவித்ததாவது, பலர் நட்பாக பழகி பின்னர் மிரட்டல் மற்றும் வன்முறையின் மூலம் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கியதாகும்.
சிலர் தெருக்களில் போதைப்பொருள் விற்பனை செய்யவும் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறியுள்ளனர். அறிக்கையில், தெற்கு லண்டனில் மட்டும் சுமார் 60 சிறுமிகள் இத்தகைய கும்பல்களின் பாதிப்புக்குள்ளாகியிருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக Sadiq Khan அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, லண்டனில் இத்தகைய கும்பல்கள் இயங்குகின்றன என்ற ஆதாரம் எதுவும் இல்லை என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பொலிஸார் மற்றும் சமூக அமைப்புகள் இவ்வாறான குற்றச்சாட்டுகளை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.