Ebola அச்சம் ; அமெரிக்கா சென்ற Air France விமானம் கனடாவுக்கு திருப்பிவைப்பு
கிழக்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் எபோலா (Ebola) வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் தவறுதலாக விமானத்தில் ஏறியதைத் தொடர்ந்து, ஏர் பிரான்ஸ் (Air France) விமானம் அமெரிக்காவுக்குப் பதிலாக கனடாவிற்குத் திருப்பி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெட்ராய்ட் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த விமானம், புதிய Ebola பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக மொன்றியல் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் U.S. Customs and Border Protection வெளியிட்டுள்ள அறிக்கையில், எபோலா பரவல் அபாயத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா விதித்துள்ள நுழைவுக் கட்டுப்பாடுகளின்படி, குறித்த பயணி விமானத்தில் பயணித்திருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அமெரிக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, அந்தப் பயணியை ஏற்றிச் சென்ற விமானம் டெட்ராய்ட் விமான நிலையத்தில் தரையிறங்குவதைத் தடுத்து, கனடாவின் மொன்றியாலுக்குத் திருப்பி அனுப்பியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Centers for Disease Control and Prevention மற்றும் Department of Homeland Security ஆகியவை இணைந்து, Ebola பரவலைத் தடுக்கும் நோக்கில் தற்காலிக அவசரக் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன.
அதன்படி, கடந்த 21 நாட்களுக்குள் உகாண்டா, காங்கோ ஜனநாயகக் குடியரசு அல்லது தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்த அமெரிக்கர் அல்லாத வெளிநாட்டு பிரஜைகள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், World Health Organization வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், தற்போதைய Ebola பரவலால் சுமார் 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 139 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொற்று பரவல் இன்னும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.