மருத்துவமனையில் 10 மாதங்கள்... 8 கால்விரல்களை இழந்த கனேடியர்: எச்சரிக்கை செய்தி
கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட சிக்கலில் 10 மாதங்கள் மருத்துவமனை சிகிச்சையில் இருந்த எட்மண்டன் நபரின் 8 கால்விரல்கள் துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எட்மண்டன் பகுதியை சேர்ந்த 62 வயது எரிக் என்பவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, 2020 டிசம்பர் மாதம் 30ம் திகதி மிகவும் மோசமான நிலையில் ஆல்பர்ட்டா பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், 3 மாதங்கள் மருத்துவ ரீதியான கோமாவில் வைக்கப்பட்டுள்ளார். உயிர் தப்ப 10 சதவீத வாய்ப்புகளை எஞ்சியிருந்த நிலையில், மிகவும் பிடிவாதமாக தாம் உயிர் பிழைத்ததாக எரிக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அதற்கு விலையாக 8 கால்விரல்களையும் விரல் நுனி ஒன்றையும் அளிக்க வேண்டியிருந்தது என்றார். கொரோனா பாதிப்பால், அவரது கால் விரல்கள் கருப்பு நிறத்துக்கு மாறியதுடன், உணர்ச்சியற்றுப் போனது என்றார் எரிக்.
கடந்த ஜூன் 7ம் திகதி, தமது 8 கால்விரல்களையும் கை விரல் நுனி ஒன்றையும் மருத்துவர்கள் துண்டித்ததை எரிக் நினைவுகூர்ந்துள்ளார். நீண்ட 10 மாதங்கள் மருத்துவமனை சிகிச்சையில் இருந்து வீடு திரும்பிய பின்னரும், முழுமையாக குணமடையவில்லை என்றே எரிக் கூறுகிறார்.
மட்டுமின்றி, அவரது ஆக்ஸிஜன் அளவை கண்காணிக்க இப்போதும் குறிப்பிட்ட கருவிகளை பயன்படுத்தி வருகிறார். மேலும், அவரால் இன்னும் சுயமாக நடக்கவும் முடியவில்லை என எரிக் குடும்பத்தினர் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, கொரோனா பெருந்தொற்றை எவரும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும், 10 மாதங்களில் தாம் பட்ட அவஸ்தையே அதற்கு ந்சாட்சி எனவும் தெரிவித்துள்ளார் எரிக்.