புர்கினா பாசோ; கொடூர தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகள் 11 பேர் கொலை
புர்கினா பாசோவில் திடீரென்று தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதில், பொலிஸ் அதிகாரிகள் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். புர்கினா பாசோ என்ற ஆப்பிரிக்க நாட்டில் கடந்த 2015 ஆம் வருடத்திலிருந்து அல்கொய்தா மற்றும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த ஆயுத கும்பல், தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
இதனால் தற்போது வரை 1,400 மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் சோல்ஹான் என்ற கிராமத்தில் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டதில் சுமார் 138 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் யிர்கோ என்ற நகரில் பொலிஸார் நிவாரணப்பணியை மேற்கொண்டிருந்தபோது அவர்கள் மீது கண்மூடித்தனமாக பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் இத்தாக்குதலை நடத்தியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.