தடுப்பூசியில் மீண்டும் சாதனை படைத்த கனடா
கனடாவில் 12 வயதுக்கு மேற்பட்ட 50% மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது மொத்த கனேடிய மக்கள் தொகையில் 44% என கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, கனடா 16.7 மில்லியனுக்கும் அதிகமான இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளையும் 26.2 மில்லியனுக்கும் அதிகமான முதல் டோஸ் தடுப்பூசிகளையும் வழங்கியுள்ளது.
பெரும்பாலான மாகாணங்களில் டெல்டா மாறுபாடு பரவும் அச்சுறுத்தல் எழுந்த நிலையிலேயே, பெருமளவு மக்கள் தங்களின் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கு ஆர்வம் காட்டினர்.
மேலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க, நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணையும் சரிவடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இருப்பினும், இளம் வயது சமூகத்தினர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குவது கவலை அளிப்பதாக கனேடிய சுகாதாரத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.