தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை நிறுத்தினால் பாதிப்பு ஏற்படும்: கனடா பணி வழங்குவோர் கருத்து
தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை நிறுத்தினால் பாதிப்பு ஏற்படும் என கனடா பணி வழங்குவோர் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
கனடா தனது தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் என கனடா எதிர்க்கட்சித் தலைவரான Pierre Poilievre வலியுறுத்தியுள்ளார்.
தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தால் கனேடிய பணியாளர்கள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாகவும், ஊதியங்கள் மீது அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றச்சாட்டுகள் முன்வைத்துள்ளார்.
ஆனால், தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை நிறுத்தினால் கிராமப்புற சமுதாயத்தினருக்கு பாதிப்பு ஏற்படும் என கனடா பணி வழங்குவோர் சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
நோவா ஸ்கொஷியாவிலுள்ள Victoria Co-operative Fisheries என்னும் நிறுவனத்தின் பொது மேலாளரான Osborne Burke என்பவர், கனடா எதிர்க்கட்சித் தலைவரான Pierre Poilievreக்கு, கிராமப்புறங்களில் வேலை காலியிடங்களை நிரப்ப பணி வழங்குவோர் படும் பாடு புரியவில்லை என்பதையே அவரது கூற்று காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
நான் Pierre Poilievreஇடம் கேட்கிறேன், வேலை தேடிக்கொண்டிருப்பதாக அவர் கூறும் பணியாளர்கள் எங்கே? உண்மை என்னவென்றால், வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்கிறார் Burke.
மேலும், Pierre Poilievreஇன் கூற்று, தங்கள் குடும்பங்களுக்கு உணவளிப்பதற்காக வேலை செய்யும் புலம்பெயர்ந்தோருக்கு நன்மை செய்வதைவிட அதிகம் தீமைதான் செய்வதாக உள்ளது என்கிறார் நோவா ஸ்கொஷியாவிலுள்ள புலம்பெயர்தல் மையம் ஒன்றின் எக்சிகியூட்டிவ் இயக்குநரான Stacey Gomez.
புலம்பெயர்ந்தோர், கனேடிய இளைஞர்களின் வேலையைப் பறிப்பதாக Pierre Poilievre கூறுவது ஆதாரமற்றது என்று கூறும் அவர், நோவா ஸ்கொஷியாவைப் பொருத்தவரை புலம்பெயர்ந்தோர் விவசாயம், மீன் பண்ணைகள் மற்றும் ட்ரக் தொழிலில் மட்டுமே ஈடுபடுகிறார்கள்.
இந்த பணிகளை, அதுவும் கோடைக்காலத்தில் செய்ய எந்த கனேடிய இளைஞரும் முன்வருவதில்லை என்கிறார் அவர்.