ஒன்டாரியோவில் சீரற்ற காலநிலை குறித்து கடும் எச்சரிக்கை
கடுமையான குளிர்கால புயல் கிழக்குத் திசை நோக்கி நகர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை இரவு வரை ஒன்றாரியோ மாகாணத்தை பாதிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
வடமேற்கு ஒன்டாரியோ பகுதிகளில் 20 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு ஏற்படலாம். மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் பார்வைத்திறன் குறையும் அபாயம் உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நேரத்தில், அதிகபட்ச பனிப்பொழிவு அமெரிக்க எல்லைக்கு அருகிலும் தன்டர் பே நகரத்தின் தெற்குப் பகுதிகளிலும் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், புயலின் திசை மாற்றம் தொடர்பாக இன்னும் சில நிச்சயமற்ற தன்மை உள்ளதால், பனிப்பொழிவு அளவும் பாதிக்கப்படும் பகுதிகளும் மாறக்கூடும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனால் 15 மில்லிமீட்டர் வரை பனிக்கட்டி படிவு ஏற்பட்டு மின்சார தடைகள் உருவாகும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்குப் பகுதிகளான பிரான்ட்போர்ட், ஹமில்டன், குயில்ப், கிட்ச்னர், ஸ்டார்ட்போர்ட் மற்றும் டொராண்டோ ஆகிய நகரங்களில் புதன்கிழமை காலை முதல் மாலை வரை பல மணி நேரங்கள் உறைமழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
“உயரமான நிலப்பகுதிகளில் மிக ஆபத்தான சூழ்நிலை எதிர்பார்க்கப்படுகிறது.
சாலைகள் மற்றும் நடைபாதைகள் மிகவும் பனிக்கட்டி படிந்து வழுக்கலாக மாறும். அலுவலக நேர போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படலாம். வழுக்கி விழும் அபாயத்தால் காயங்கள் ஏற்படும் சாத்தியமும் உள்ளது,” என கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரித்துள்ளது.