காபூலில் தலிபான்களுக்கு எதிராக வெடித்த முதல் போராட்டம்! களத்தில் இறங்கிய பெண்கள்
ஆப்கான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியது முதல் பல ஆயிரம் பேர் வெளிநாடுகளுக்குத் தப்பியோட முயற்சித்து வரும் நிலையில், காபுல் தெருக்களில் பெண்கள் சிலர் தலிபான் ஆக்கிரமிப்புக்கு எதிராக கோஷம் எழுப்பிப் போராடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
தலிபான் அடிப்படைவாத ஆக்கிரமிப்புக்கு எதிராக அந்த நாட்டில் எழுந்திருக்கும் முதல் போராட்டம் இது என சொல்லப்படுகிறது. கருப்பு நிற ஹிஜாப் மற்றும் அபயாக்கள் அணிந்த நான்கு பெண்கள் சிறிய பேப்பர்தாள்களில் எழுதப்பட்ட எதிர்ப்பு வாசகங்களை ஏந்தியபடி காபுல் சாலையில் போராட்டம் நடத்தினார்கள். துப்பாக்கி ஏந்திய தலிபான்கள் அவர்களை சுற்றி இருக்கும்போதே கோஷங்கள் எழுப்பித் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். துப்பாக்கி ஏந்திய தலிபான்கள் அந்தப் பெண்களிடம் ஏதோ கூறினாலும் அவர்களது போராட்டத்தை தடுக்க எந்த முயற்சியும் அவர்கள் செய்யவில்லை.
இந்நிலையில் சுற்றி பல துப்பாக்கி ஏந்திய தலிபான்கள் வேடிக்கை பார்க்க, இந்தப் பெண்கள் தங்களது போராட்டக்குரலைப் பதிவு செய்தது சர்வதேசப் பெண்கள் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
கடந்த 15ஆம் தேதி ஆஃப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் தலிபான் கொண்டு வந்தது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பியோடிய நிலையில் தற்போது ஆஃப்கான் தலிபானின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
First reported women’s protest in Kabul following the takeover by the Taliban:
— Leah McElrath ?️? (@leahmcelrath) August 17, 2021
Four women holding handwritten paper signs stand surrounded by armed Taliban fighters
Indescribable courage:pic.twitter.com/1HtpQ4X2ip
இதேவேளை முன்னதாக தலிபான் கட்டுப்பாட்டில் ஆஃப்கான் வந்துள்ளதால் பெண்களுக்கான உரிமைகள் பெருமளவில் பறிக்கப்படும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந் நிலையில் தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஷபிகுல்லா முஜாஹித் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ''இஸ்லாமிய அடிப்படையில் பெண்களுக்கு உரிமைகளை வழங்க தலிபான் உறுதிபூண்டுள்ளது. பெண்களுக்குத் தேவையான சுகாதாரத் துறையிலும், பிற துறைகளிலும் பெண்கள் வேலை செய்யலாம். பெண்களுக்கு எதிரான பாகுபாடு இருக்காது. காபூலில் உள்ள தூதரகங்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியமானது. அனைத்து தூதரகங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் உதவி நிறுவனங்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்கிறோம் என மற்ற நாடுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.