ஆப்கான் விவகாரம்; அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ள ஐரோப்பிய நாடுகள்
ஆப்கான் நாடு தலிபான்களின் வசமான நிலையில், ஆப்கானில் படைகளை முன்னரே திரும்பப் பெற்றது அமெரிக்க அரசின் தவறான கணக்கீடு என ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றியதுடன் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதன் காரணமாக ஆப்கான் மக்களிடத்தில் பதற்றம் நிலவுவதுடன் ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் முடிவை, ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் விமர்சித்துள்ளன. இதுகுறித்து ஜெர்மன் நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு உறவுக் குழுவின் தலைவர் நோர்பர்ட் ரோட்ஜென்(Norbert Roettgen) கூறுகையில்,
'நான் இதை கனத்த இதயத்துடனும், என்ன நடக்கிறது என்ற திகிலுடனும் சொல்கிறேன். முன்கூட்டியே படைகளைத் திரும்பப் பெறுவது என்பது அமெரிக்க அரசின் தவறான கணக்கீடு. இது மேற்கத்திய நாடுகளின் அரசியல் மற்றும் நம்பகத்தன்மையில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது அவநம்பிக்கையின்மை மற்றும் துரோகத்தை உணரச் செய்யும்' என்றார்.
அதேவேளை ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் (Angela Merkel) கூறுகையில்,
'ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு இவை கசப்பான நிகழ்வுகள்' என்று தெரிவித்தார்.
இதேவேளை ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் மீண்டும் கைப்பற்றுவதற்கு அந்நாட்டு அரசும், அந்நாட்டுப் படைகளுமே காரணம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.