அத்துமீறி ஊடுருவிய 4 சீன கப்பல்களால் பரபரப்பு!
தென்சீன கடல் பகுதி முழுவதும் தனக்கு சொந்தம் என கூறி வரும் சீனா, புரூணை, மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்னாம் மற்றும் தைவான் ஆகிய நாடுகளின் நீர்வழி பகுதிகளை ஆக்கிரமிக்கும் வகையில் சீனா செயல்படுகிறது.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன் பிலிப்பைன் நீர்வழி பகுதியில் 240 சீன கப்பல்கள் காணப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை கடந்த மார்ச்சில் 220 கப்பல்களாக இருந்தது.
எனினும், கடந்த சில மாதங்களாக சீன அரசானது தென்சீன கடல் மற்றும் கிழக்குசீன கடல் பகுதிகளில் நீர்வழி பயன்பாட்டை அதிகரித்து உள்ளது. அமெரிக்க ராணுவத்தின் வருகையை முன்னிட்டு சீனா இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் கிழக்கு சீன கடலில் ஜப்பானிய நாட்டின் கடல்வழி பகுதியில் அமைந்த சென்காகு தீவில் சீனாவின் 4 கப்பல்கள் அத்துமீறி ஊடுருவியுள்ளன.
இது தொடர்பில் ஜப்பானிய கடலோர காவல் படை வெளியிட்டுள்ள செய்தியில், உட்சூரி மற்றும் தைஷோ தீவுகளின் கடல்வழி பகுதிகளில் இந்த கப்பல்கள் உள்ளே நுழைந்துள்ளன.
இதனையடுத்து உடனடியாக அந்த கப்பல்களை அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டோம். எங்களது கடல்வழி பகுதியில் அமைந்த சென்காகு தீவிற்குள் சீன கப்பல்கள் அத்துமீறி நுழைவது இது 16வது முறை என ஜப்பானிய கடலோர காவல் படை தெரிவித்து உள்ளது.