ஓடுதளத்தை விட்டு புல்தரையில் சிக்கிய விமானத்தால் பரபரப்பு
நேபாளத்தில் ஓடுதளத்தை விட்டு விலகி புல்தரையில் சிக்கிய விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேபாள தலைநகர் காத்மண்டு விமான நிலையத்தில் இருந்து நேபாள் கஞ்ச் பகுதிக்கு இன்று காலை ஸ்ரீஏர்லைன்ஸ் என்ற பயணிகள் விமானம் புறப்படுவதாக இருந்தது.
இதன்போது பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படுவதற்கான ஓடுதளத்திற்கு விமானம் வந்தபோது எதிர்பாராத விதமாக ஓடுதளத்தை விட்டு விலகி விமானம் புல்தரையில் சிக்கிக்கொண்டது.
விமானத்தின் இடதுபக்க டையர் ஓடுதளத்தை விட்டு விலகி அருகில் இருந்த புல்தரையில் சிக்கிக்கொண்டதால் விமானத்தில் இருந்த பயணிகள் சற்று பதற்றமடைந்தனர்.
இதனையடுத்து உடனடியாக அங்கு விரைந்த விமானநிலைய ஊழியர்கள் பயணிகளை விமானத்தில் இருந்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர். எனினும் இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இதனை தொடர்ந்து புல்தரையில் சிக்கிய விமானம் மீட்பு வாகனங்கள் மூலம் மீட்கப்பட்ட பின்னர் விமானம் மீண்டும் நேபாள்கஞ்ச் நகருக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்படுகின்றது.