சூயஸ் கால்வாயை விரிவுபடுத்த எகிப்து முடிவு
எகிப்து நாட்டின் சூயஸ் கால்வாயை விரிவுபடுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக சூயஸ் கால்வாய் ஆணைய தலைவா் லெப்டினன்ட் ஜெனரல் ஒசாமா ராபி அறிவித்துள்ளார்.
ஆசியாவின் மத்திய தரைக்கடல் பகுதியையும், ஐரோப்பாவின் செங்கடல் பகுதியையும் இணைக்கும் முக்கிய நீா்வழித் தடமாக விளங்குகிறது எகிப்து நாட்டில் உள்ள சூயஸ் கால்வாய்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் பயணிக்கும் நூற்றுக்கணக்கான கப்பல்கள் இந்தக் கால்வாய் வழியாகத்தான் செங்கடல் பகுதிக்கு பயணித்து வருகின்றன.
உலக வா்த்தகத்தில் 10 சதவீதம் இந்தக் கால்வாய் வழியாக நடப்பதாகவும், கடந்த ஆண்டில் மட்டும் இந்தக் கால்வாய் வழியாக 19,000 கப்பல்கள் கடந்துள்ளதாகவும் அதிகாரபூா்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தைவான் நாட்டைச் சோ்ந்த ‘எவா் கிரீன் மரைன்’ என்ற நிறுவனம் இயக்கி வரும் ஜப்பான் நாட்டுக்குச் சொந்தமான ‘எவா் கிவன்’ என்ற பிரமாண்ட சரக்கு கப்பல் அண்மையில் சூயஸ் கால்வாயில் தரைதட்டி குறுக்காக சிக்கிக் கொண்டது.
இதனால் பல லட்சம் மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்ததுடன் உலக பொருளாதாரமே ஸ்தம்பித்தது, இந்நிலையில் சூயஸ் கால்வாயை விரிவுபடுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பில் சூயஸ் கால்வாய் ஆணைய தலைவா் லெப்டினன்ட் ஜெனரல் ஒசாமா ராபி கூறுகையில், கால்வாயின் தென்கோடியில் சீனாய் தீபகற்பம் பகுதியில் கிழக்கு நோக்கி 40 மீட்டா் அளவுக்கு விரிவுபடுத்தவும், கால்வாயின் ஆழத்தை இப்போது உள்ள 66 அடி அன்ற அளவிலிருந்து 72 அடியாக ஆழப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தக் கால்வாயில் திறக்கப்பட்ட இரண்டாவது வழித் தடமும் 10 கி.மீ. நீளத்துக்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்மூலம், இந்த இரண்டு வழித்தட கால்வாய் 82 கி.மீ. நீளம் கொண்டதாக விரிவடையும் என்பதோடு, மேலும் அதிக கப்பல்கள் எளிதாக கால்வாயை கடக்க வழி ஏற்படும் என தெரிவித்துள்ளார்.