உணவு விலைகள் உயர்வு எச்சரிக்கை
ஈரான் போர் நிலைமை உலகளாவிய விவசாய துறையில் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் உர விநியோக குறைபாடு காரணமாக விவசாயிகள் பெரும் சிக்கலை எதிர்கொள்கிறார்கள்.
ஹோர்மூஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தை ஈரான் கடுமையாக கட்டுப்படுத்தியதால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% மற்றும் உர வர்த்தகத்தில் 30% பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதுடன், விவசாய உற்பத்திக்குத் தேவையான நைட்ரஜன், யூரியா, பாஸ்பேட், சல்பர் போன்ற உரங்களின் விலையும் அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு டீசல் விலை இரட்டிப்பு ஆகியுள்ளது. இது உணவு விலையை நேரடியாக அதிகரிக்கும் முக்கிய காரணம் என கனடாவைச் சேர்ந்த விவசாயி டெரின் ஸ்ரோஸ்ப்ரீ தெரிவித்துள்ளார்.
டீசல் விலை உயர்வு, உற்பத்தி முதல் போக்குவரத்து வரை முழு விநியோகச் சங்கிலியையும் பாதிக்கிறது.
இதனால் அடுத்த சில மாதங்களில் உணவு பொருட்களின் விலை 25% முதல் 50% வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்போது சில விவசாயிகளிடம் எரிபொருள் மற்றும் உர கையிருப்புகள் இருப்பினும், ஆண்டின் இறுதியில் நடைபெறும் அறுவடை காலத்தில் பிரச்சினை தீவிரமாகும் என கூறப்படுகிறது.