இந்திய தயாரிப்பு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை திருப்பி கொடுங்கள்: கனேடிய நிபுணர்கள் கோரிக்கை
பயன்பாட்டில் இல்லாமல் வைத்திருக்கும் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் தொடர்பில் நிபுணர்கள் தரப்பு கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்திய தயாரிப்பு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் மொத்த 655,000 டோஸ்கள் வியாழக்கிழமை கனடா வந்து சேர்ந்துள்ளது.
ஆனால் பெரும்பாலான பிராந்தியங்கள் தடுப்பூசி பற்றாக்குறை அல்லது ரத்தக்கட்டிகள் சிக்கல் காரணமாக ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
கனடாவுக்கு தடுப்பூசிகள் கிடைத்தும், மாகாணங்களுக்கும் பிராந்தியங்களுக்கும் அனுப்பாமல் தேங்கிக்கிடப்பது இதுவே முதன் முறை என கூறப்படுகிறது.
இதற்கு முதன்மை காரணமாக கூறப்படுவது, யார் யாருக்கு தடுப்பூசிகள் தேவை என்பது தொடர்பில் தெளிவான முடிவுக்கு பெடரல் நிர்வாகம் இன்னும் எட்டவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
மே 8ம் திகதி முடிய, 2.16 மில்லியன் கனேடியர்களுக்கு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கு பைசர் அல்லது மாடர்னா தடுப்பூசியின் அடுத்த டோஸ் வழங்கலாமா என்றும் கனடா யோசித்து வருகிறது.
இது தொடர்பில் பிரித்தானியா வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக பைசர் அல்லது மாடர்னா அளிப்பது பாதுகாப்பானதே என தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் இந்திய தயாரிப்பு ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளை தாமதமின்றி திருப்பி அனுப்புவதே உகந்த முடிவாக இருக்கும் என நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தியாவில் தற்போதைய நிலை மிக மோசமடைந்துள்ளதாலும், தடுப்பூசி தட்டுப்பாடு மிகுந்து காணப்படுவதாலும், கனேடிய நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தில் ஒரு முடிவெடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.