நெதர்லாந்தில் யூதப் பாடசாலை ஒன்றில் வெடிப்பு சம்பவம்
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள யூதப் பாடசாலை ஒன்றில் இன்று வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சம்பவத்தை "யூத சமூகத்திற்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்" என நகர முதல்வர் ஃபெம்கே ஹல்செமா (Femke Halsema) வன்மையாகக் கண்டித்துள்ளார்.

எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை
ஆம்ஸ்டர்டாமின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள இந்தப் பாடசாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில், கட்டடத்தின் வெளிப்புறச் சுவர் மற்றும் மழைநீர் குழாய்கள் சேதமடைந்தன.
எனினும் அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. முன்னதாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் காரணமாக, இந்தப் பாடசாலை ஏற்கனவே பலத்த பாதுகாப்பு வேலிகளால் சூழப்பட்டிருந்தாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஐரோப்பா முழுவதும் உள்ள யூத மற்றும் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் அரசுகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.