அதிக வெப்பநிலை உளவியல் பாதிப்பினை ஏற்படுத்தும் ஆய்வு முடிவு
அதிக அளவு வெப்ப நிலையுடனான காலநிலையானது உளச் சுகாதாரத்தை பாதிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைய நாட்களில் ஐரோப்பா பிரித்தானியா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் கடுமையான வெப்பநிலை நீடித்து வருகின்றது.
உலக பொருளாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிக வெப்பநிலை உள சுகாதாரத்தில் தாக்கத்தை செலுத்தும் என தெரிவித்துள்ளது.
உலகின் பல நாடுகளில் நடத்தப்பட்ட 10 ஆய்வுகளின் இறுதி முடிவுகள் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மிக அதிகமான வெப்பநிலை ஈரப்பதன் இன்மை ஆகிய காரணிகள் மக்களை அழுத்தங்களுக்கு உள்ளாக்கும் எனவும் பல்வேறு உளவியல் சார் நோய்களை உருவாக்கும் எனவும் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
அதிக வெப்ப காணப்படும் நிலைமைகளில் தற்கொலை சம்பவங்கள் அதிகம் இடம் பெற்றுள்ளதாக அவுஸ்திரேலியா நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு பாகை செல்சியஸ் வெப்பநிலை அதிகரிப்பு பதிவாகும் போதும் உளவியல் சார் பிரச்சனைகளின் அடிப்படையிலான மரணங்களின் எண்ணிக்கையும் உயர்வடைந்து செல்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கனடாவிலும் கூடுதல் வெப்பநிலை நிலவும் காலப்பகுதிகளில் குறிப்பாக வெப்ப அலை காணப்படும் காலப்பகுதிகளில் உளச்சுகாதாரம் பாதிக்கப்படுவதனை அவதானித்துள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த ஆண்டில் கனடாவில் வெப்ப அலை நிலவிய காலப்பகுதியில் சுமார் 600 பேர் வரையில் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் உயிரிழந்திருந்தனர்.
இந்த காலப்பகுதியில் உள சுகாதார அழுத்தங்கள் மற்றும் தற்கொலை எண்ணங்கள் தொடர்பாக எழும்பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தொலைபேசி இலக்கங்களுக்கு மிக அதிக எண்ணிக்கையில் அழைப்புகள் கிடைக்கப் பெற்றதாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் அனர்த்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஸ்டேசி அஸ்தம் தெரிவித்துள்ளார்.