குடும்பத்துடன் ஹொட்டலுக்கு சென்றவர் மீது கொலைவெறி தாக்குதல்: பதற வைக்கும் சம்பவம்
தெற்கு எட்மண்டனில் குடும்பத்துடன் ஹொட்டலுக்கு சென்றவர் மீது மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கியால் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அந்த நபர் காயங்களுடன் தப்பியதாக தெரிய வந்துள்ளது. தொடர்புடைய சம்பவம், அக்டோபர் 8ம் திகதி இரவு சுமார் 8.20 மணியளவில் 101வது தெரு 12வது அவென்யூவில் நடந்ததாக எட்மண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
9 வயது சிறுமியுடன் அந்த நபரும் அவரது குடும்பமும் சம்பவத்தின் போது குறிப்பிட்ட ஹொட்டலில் உணவருந்தியுள்ளது. இந்த நிலையில், ஹொட்டலுக்கு வெளியே இருந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.
இதில் குறித்த நபர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில், அந்த நபரின் குடும்பத்தினருக்கு காயங்கள் ஏற்படவில்லை என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவத்தில் இருவர் ஈடுபட்டிருப்பதாகவும், வாகனம் ஒன்றில் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை நாட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.