கனடாவை உலுக்கிய நால்வர் மரணத்தில் இளைஞர் கைதானது எப்படி? வெளிவரும் பகீர் பின்னணி
லண்டனில் இஸ்லாமிய குடும்பத்தினர் நால்வரை வாகனத்தால் மோதி கொலை செய்த இளைஞர், பொலிசாருக்கு தகவல் அளித்து தம்மை கைது செய்ய டாக்ஸி சாரதி ஒருவரிடம் கெஞ்சியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் நடந்த ஞாயிறன்று இரவு குறித்த டாக்ஸி சாரதி வணிக வளாகம் ஒன்றின் வாகன நிறுத்துமிடத்தில் தமது டாக்ஸியை நிறுத்திவிட்டு, தேநீர் அருந்திக்கொண்டு இருந்துள்ளார்.
சட்டென்று அப்பகுதிக்கு வேகமாக வந்த ஒரு கருப்பு நிற பிக்கப் டிரக்கில் இருந்த நபர், டாக்ஸி சாரதியிடம் நான் சிலரை கொன்று விட்டேன், பொலிசாருக்கு தகவல் அளித்து என்னை கைது செய்ய சொல்லுங்கள் என கத்தியுள்ளார்.
அப்போது தான் டாக்ஸி சாரதி, அந்த பிக்கப் டிரக்கினை கவனித்துள்ளார். அதன் முன் பகுதி மிக மோசமாக சேதமடைந்து இருந்ததுடன், அதில் அதிகமான ரத்தக்கறையும் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த டாக்ஸி சாரதி உடனடியாக 911 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அப்போது சாலையில் ஒரு பொலிஸ் வாகனத்தை அவர் கவனிக்க, நேரடியாக சென்று நடந்த சம்பவத்தை பொலிசாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட பொலிசார், அந்த இளைஞரை பிக்கப் டிரக்கில் இருந்து வெளியே வரவழைத்து கைது செய்துள்ளனர். அந்த இளைஞர் கவச உடையுடன் ராணுவ தலைக்கவசம் அணிந்திருந்ததாகவும், அதை அகற்றியபோது, அவர் அணிந்திருந்த டிஷர்ட்டில் ஸ்வஸ்திகா குறியீடு காணப்பட்டதாகவும் டாக்ஸி சாரதி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்படும் போது அந்த இளைஞர் சிரித்தபடி இருந்ததாகவும், ஏதோ முணுமுணுத்துக்கொண்டார் எனவும் கூறப்படுகிறது. இஸ்லாமிய வெறுப்புணர்வே இந்த தாக்குதலுக்கு காரணம் என முதற்கட்ட விசாரணைக்கு பிறகு பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தாக்குதலை முன்னெடுத்த அந்த இளைஞர் 20 வயதான Nathaniel (Nate) Veltman என அடையாளம் கண்டுள்ளதுடன், அவர் மீது கொலை முயற்சி, கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
பொலிசாருக்கு தகவல் அளித்த அந்த டாக்ஸி சாரதியும் ஒரு இஸ்லாமியர் என்றே தகவல் வெளியாகியுள்ளது.