கனடாவில் மாயமாகியுள்ள சர்வதேச மாணவர்
கனடாவுக்கு கல்வி கற்பதற்காகச் சென்ற இந்திய மாணவர் ஒருவர் மாயமாகியுள்ள விடயத்தால் அவரது குடும்ப உறுப்பினர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
ஏப்ரல் மாதம்தான் இந்தியாவின் ஹரியானாவிலிருந்து கனடாவுக்குக் கல்வி கற்பதற்காகச் சென்றார் சாஹில் குமார் (22).
இம்மாதம், அதாவது, மே மாதம் 16ஆம் திகதி, ஹாமில்ட்டனில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து, ரொரன்றோவில் தான் கல்வி கற்கும் Humber கல்லூரிக்குப் புறப்பட்டுள்ளார் குமார்.
1.00 மணியளவில், தனது கல்லுரி இருக்கும் இடத்துக்கு அருகே குமார் நடமாடும் காட்சிகள் CCTV கமெராவில் பதிவாகியுள்ளன. அதற்குப் பிறகு குமாரைக் காணவில்லை.
மகன் கனடாவுக்குச் சென்றதையடுத்து அளவற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர் குமாரின் குடும்பத்தினர்.
குமார் வாரம் ஒரு முறை தவறாமல் வீட்டுக்கு தொலைபேசி மூலம் அழைக்க, மகனுக்கு கிடைக்கவிருக்கும் நல்ல எதிர்காலம் குறித்து அவரது பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால், மே மாதம் 16ஆம் திகதி, 11.49 மணிக்கு ரொரன்றோ ரயில் நிலையத்திலிருந்து தன் பெற்றோரிடம் பேசிய குமாரின் மொபைல், 1.31க்கு சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.
நான்கு நாட்களாக குமாரைக் காணாத நிலையில், அதற்குப் பிறகுதான் பொலிசார் குமாரைக் காணவில்லை என அறிவித்துள்ளார்கள்.
இன்றுவரை குமார் என்ன ஆனார், அவர் எங்கே சென்றார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இதற்கிடையில், மகனுக்கு என்ன ஆயிற்று என்று தெரியாமல் இந்தியாவில் குமார் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளார்கள்.