இருளில் மூழ்கும் புகழ்பெற்ற நினைவு சின்னங்கள்!
பிரான்ஸ் நாட்டில் மின்சாரத்தை சேமிக்க ஈபிள் கோபுரம் உள்ளிட்ட புகழ்பெற்ற நினைவு சின்னங்களுக்கான மின்சாரம் குறைக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி நெருக்கடியின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாரிஸ் நகர் சிட்டி ஹோலில் இதுவரை அதிகாலை 1 மணி வரை மின் விளக்குகள் ஒளிர்ந்து வந்தது.
இந்நிலையில் வருகின்ற 23 முதல் சிட்டி ஹோல் மற்றும் நகரில் உள்ள அருங்காட்சியகங்களில் இரவு 10 மணிக்கே விளக்குகள் நிறுத்தப்படும் என்று பாரிஸ் நகர மேயர் அன்னே ஹிடால்கோ கூறியிருக்கிறார்.
ஈபிள் கோபுரம் இரவு 9.45 மணிக்கு மூடப்படும் போது விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படும் எனவும் இதன் மூலமாக மின்சார நுகர்வு 10 விழுக்காடு குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த எரிசக்தி நெருக்கடி உக்ரைன் போர் மற்றும் காலநிலை மாற்ற பிரச்சனை காரணமாக ஏற்பட்டிருப்பதாக பாரிஸ் மேயர் கூறியிருக்கிறார்.
மேலும் கடந்த ஜூலை மாதம் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோனால் (Emmanuel Macron) அறிவிக்கப்பட்ட ஆற்றலை சேமிப்பதற்கான நிதான திட்டத்தின் ஒரு பகுதியாக இது நிர்ணயிக்கப்படுவதாக பாரிஸ் மேயர் அன்னே தெரிவித்துள்ளார்.