இந்தியாவிற்கு பிரபல அமெரிக்க விஞ்ஞானி விடுத்த எச்சரிக்கை!
இந்தியாவில் அடுத்த மாதமளவில் கொவிட் வைரஸ் தாக்கம் உச்ச நிலையை அடையலாம் என அமெரிக்காவை சேர்ந்த பிரபல மருத்துவ விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார். அப்போது நாளாந்தம் 5 இலட்சம் பேருக்கு தொற்று ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒமைக்ரொன் பரவல் காரணமாக கொரோனா தாக்கநிலை மீளவும் அதிகரித்துள்ளது. நேற்றைய நாளில் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 100 பேருக்குத் தொற்றுறுதியான நிலையில், தொற்றினை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இந்தநிலையில், வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள உலகளாவிய சுதந்திரமான சுகாதார ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், அறிவியல் விஞ்ஞானியுமான வைத்தியர் கிறிஸ்டோபர் முராரே இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
எனினும், கடந்த டெல்டா அலையின் பாதிப்புடன் ஒப்பிடும்போது, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்பும் குறைவாகவே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.