உலக எண்ணெய் சந்தை பாதிப்பு அச்சம் ; பதற்றம் அதிகரிக்கும் நிலையில் ஈரான் எச்சரிக்கை
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலடியாக பிராந்தியம் முழுவதிலும் உள்ள எரிசக்தி மற்றும் எண்ணெய் உட்கட்டமைப்புகள் மீது "உடனடியாக" தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாஃப் எச்சரித்துள்ளார்.
"ஈரானின் மின் நிலையங்கள் தாக்கப்பட்டால், பிராந்தியம் முழுவதும் உள்ள முக்கியமான எரிசக்தி மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்புகள் 'சட்டபூர்வமான இலக்குகளாகக்' கருதப்பட்டு, அவை மீள முடியாத வகையில் அழிக்கப்படும்" என காலிபாஃப் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இத்தகைய தாக்குதல்களால் உலக சந்தையில் எண்ணெய் விலைகள் நீண்ட காலத்திற்கு உயரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்து சுதந்திரம் 48 மணி நேரத்திற்குள் முழுமையாக மீட்டெடுக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்தே ஈரானின் இந்த பதில் வந்துள்ளது.