சாலையில் ஆடையை விலக்கச் சொன்ன அதிகாரி: அதிர்ச்சியில் இருந்து மீளாத இந்திய வம்சாவளி பெண்
கல்கரி பகுதிக்கு வாகனத்தில் சென்ற பெண் ஒருவரை மூச்சு சோதனையின் போது ஆல்பர்ட்டா ஷெரிப் புடவையை விலக்கச் சொன்ன சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆல்பர்ட்டாவின் Airdrie நகரில் இருந்து கல்கரிக்கு தமது சகோதரியுடன் பயணம் செய்துள்ளார் 74 வயதான கும்கும் ராய்சவுத்ரி. இந்த நிலையிலேயே ஆல்பர்ட்டா ஷெரிஃபால் தடுத்து நிறுத்தப்பட்டு மூச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஆனால், ஏற்கனவே சுவாச பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ள ராய்சவுத்ரியால் 30 நொடிகள் வரை மூச்சு சோதனைக்கு உட்பட முடியாமல் போனது. இதனால் சுமார் 17 முறை அந்த அதிகாரி தொடர்ந்து கட்டாயப்படுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் வாகனத்தில் இருந்து வெளியே வரச்சொன்ன அந்த அதிகாரி, ராய்சவுத்ரியிடம் மார்புப்பகுதி இறுக்கமாக இருப்பதால் அவரால் மூச்சு சோதனையில் தவறுவதாக கூறி, புடவையை விலக்கவும் உள்ளாடையை தளர்த்தவும் கூறியுள்ளார்.
இது தம்மை அதிர்ச்சியடைய செய்துள்ளதாக கூறியுள்ள ராய்சவுத்ரி, இதுபோன்ற ஒரு சூழல் தமது வாழ்க்கையில் ஏற்பட்டதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தை அந்த அதிகாரி பின்பற்றியிருக்கலாம் ஆனால், தாம் ஒரு பெண் என்றும் பாராமல் பரபரப்பான சாலையில் ஆடையை விலக்கச் சொல்வது தம்மை அவமானப்படுத்துவது போன்றது என குறிப்பிட்டுள்ளார் ராய்சவுத்ரி.
இந்த விவகாரம் தொடர்பில் தமது அதிருப்தியை பதிவு செய்து புகார் அளித்துள்ளார் ராய்சவுத்ரி.
மட்டுமின்றி, குறித்த அதிகாரி இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதனையடுத்து, உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.