கொரோனாவை வேண்டுமென்றே வரவைத்த பிரபல பெண் பாடகி; நேர்ந்த துயரம்!
கொரோனா வைரஸை வேண்டுமென்றே தனக்கு வரவைத்த பிரபல பெண் பாடகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெண் கிராமிய பாடகி 57 வயதான ஹனா ஹொர்கா. இவர் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான இயக்கங்களால் ஈர்க்கப்பட்டதனால், தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை.
அதேவேளை அவரது கணவர் மற்றும் மகன் ஜென் ரீக் ஆகியோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். தனது தாயிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு ரீக் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தபோதும் , ஹனா ஹொர்கா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விரும்பவில்லை.
தடுப்பூசி செலுத்திக்கொள்வதை விட கொரோனா வருவதே மேல் என அவர் கூறியதாக ரீக் தெரிவித்துள்ளார். அதேசமயம் செக் குடியரசில் தியேட்டர் போன்ற பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்ததற்கான சான்றிதலை வைத்திருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஹனா ஹொர்காவின் கணவருக்கும், மகன் ரீக்கிற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, இருவரும் தனிமைப்படுத்திக்கொண்டனர். ஆனால், ஹனா ஹெர்க்கா தனது கணவர் மற்றும் மகனுடன் எந்த வித பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றாமல் தொடர்பில் இருந்துள்ளார்.
தனக்கு கொரோனா வந்ததும் அந்த பாதிப்பில் இருந்து குணமடைந்து அதன்பின்னர் தியேட்டர் போன்ற பொது இடங்களுக்கு செல்லலாம் என அவர் நினைத்துள்ளார். தடுப்பூசி செலுத்துவதற்கு எதிரான மனநிலையில் இருந்த ஹனாவுக்கு கணவரும், மகனும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தும் ஹனா அதை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், கணவர் மற்றும் மகனை தொடர்ந்து ஹனாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார். அதன்பின்னர் , கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹனாவுக்கு உடல்நிலை மிகவும் மோசமானதுடன் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய ஹனா கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை உயிரிழப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஹனா தனது சமூகவலைதள பக்கத்தில்,
நான் குணமடைந்துவிட்டேன். இது (கொரோனா) தீவிரமானது. ஆகையால், தற்போது தியேட்டர் செல்வது முக்கியமானது. கடல் பயணம் தற்போது மிகவும் முக்கியம்’ என பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தனது தாயார் உயிரிழக்க கொரோனா தடுப்பூசிக்கு எதிரான பிரசாரமே காரணம் என ஹனாவின் மகன் ரீக் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் கொரோனாவை வேண்டுமென்றே வரவைத்த பாடகி ஹனா உயிரிழந்த சம்பவம் செக் குடியரசு நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.