எட்மண்டனில் தீ விபத்து: ஒருவர் பலி, பலர் படுகாயம்!
கனடாவின் வடக்கு எட்மண்டன் பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில், வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், குடியிருப்பில் இருந்த சிலரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
132 அவென்யூ மற்றும் 82 ஸ்ட்ரீட் சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஒன்று, சாலையை விட்டு விலகி அங்குள்ள ஒரு குடியிருப்புக் கட்டிடத்தின் மீது பலமாக மோதியது.

இந்த மோதலின் போது, கட்டிடத்தின் வெளிப்புறத்தில் இருந்த எரிவாயு குழாய் உடைந்ததால், திடீரெனப் பயங்கர வெடிப்புச் சத்தத்துடன் தீப்பிடித்தது.
வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகளைக் கொண்ட அந்த மூன்று அடுக்குக் கட்டிடத்திலிருந்து பலரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
எனினும், தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடினர். தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டிருந்ததால், கட்டிடத்தில் வசித்த சில குடியிருப்பாளர்களைத் தொடர்பு கொள்ளவோ, கண்டறியவோ முடியவில்லை என எட்மண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் கட்டிடத்தில் வசித்து வந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குடியிருப்பில் இருந்த 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதற்கான காரணம் என்ன என்பது குறித்துப் போக்குவரத்துப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த அவசர கால மீட்புப் பணிகள் காரணமாக, 82 ஸ்ட்ரீட்டில் உள்ள 131 மற்றும் 133 அவென்யூக்களுக்கு இடைப்பட்ட சாலைப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.