பாலினம் குறிப்பிடாமல் முதன்முறையாக கடவுச்சீட்டு வெளியீடு: நெகிழ்ந்த மக்கள்
அமெரிக்காவில் பாலினம் குறிப்பிடாமல் முதன்முறையாக கடவுச்சீட்டு வெளியிடப்படுள்ளது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இனி, ஆண் அல்லது பெண் என குறிப்பிட விரும்பாத மக்களுக்கு பாலினமற்றவர்கள் என புதிதாக கடவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இது தொடர்பில் வெளிவிவகாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த ஆண்டு இந்த வகைப்பாடு இன்னும் விரிவான அளவில் செயற்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
இதனிடையே, தன்பாலின ஈர்ப்பு மக்களுக்கான அமெரிக்க சிறப்பு இராஜாங்க தூதர் Jessica Stern குறித்த புதிய முயற்சியை வரவேற்றுள்ளதுடன், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
ஒருவர் தனது உண்மையான அடையாளத்தை பிரதிபலிக்கும் அடையாள ஆவணங்களைப் பெறும்போது தான், அவர்கள் அதிக கண்ணியத்துடனும் மரியாதையுடனும் வாழ்கிறார்கள் என கூற முடியும் என்றார் ஸ்டெர்ன்.
தற்போது அளிக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டானது முதன்முறையாக யார் பெற்றுக்கொண்டார் என்பதை வெளிவிவகார அலுவலகம் வெளியிடவில்லை. ஆனால், பாலினமற்றவர் என குறிப்பிட்டு தமக்கு கடவுச்சீட்டு வேண்டும் என சட்ட போராட்டத்தில் ஈடுபட்ட கொலராடோ குடியிருப்பாளர் Dana Zzyym என்பவருக்கு குறிப்பிட்ட கடவுச்சீட்டு அளிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
பாலினம் குறிப்பிட விரும்பாதவர்களுக்கான கடவுச்சீட்டை ஏற்கனவே கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்த் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.