ஆப்கானில் தலிபான் ஆட்சி; காபூலில் தரையிறங்கிய முதல் விமானம்!
ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர் நாடு தலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில் , உணவுப் பொருள்களுடன் தலைநகர் காபூலில் உள்ள ஹமீத் கர்ஸாய் சர்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் விமானம் தரையிறங்கியது.
மிகப்பெரிய ஐக்கிய அரபு அமீரகத்தின் விமானம் சுமார் 60 டன் உணவுப் பொருள்களுடன் காபூல் விமான நிலையத்தில் வெள்ளியன்று தரையிறங்கியதாக தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பியிருக்கும் உணவு பொருள்கள் ஆப்கனுக்கு மிக நல்ல செய்தியாக இருக்கும் என்றும், ஆப்கனை ஆதரிக்கும் சகோதர நாட்டுக்கு நாங்கள் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கனில் படைகளை நிலைநிறுத்தியிருந்த அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
இதையடுத்து , காபூல் விமான நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பணியில் தலிபான்களுக்கு கத்தார் உதவி வருவதாக நேற்று தகவல் வெளியான நிலையில் அங்கு நேற்று முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.