நாட்டைவிட்டு வெளியேற முண்டியடிப்பு; ஆப்கான் விமான நிலையத்தில் 5 பேர் பலி
காபூல் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், காபூல் விமான நிலையத்தில் இன்று நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர். விமானங்களில் ஏறுவதற்காக ஒரே நேரத்தில் மக்கள் முண்டியடித்துக்கொண்டு கூடியதால் அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது.
இதையடுத்து, காபூல் விமான நிலையத்தில் இருந்த அமெரிக்க படையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக முதலில் தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து காபூல் விமான நிலையம் மூடப்பட்டது.
இந்த நிலையில், காபூல் விமான நிலையத்தில் இருந்து ஐந்து பேர் சடலமாக எடுத்துச்செல்லப்பட்டதை பார்த்ததாக அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், அவர்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனரா அல்லது கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தனரா என்ற விவரம் தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.