கனடாவில் நகைக்கடை கொள்ளை முயற்சி: 13 வயது சிறுவன் உட்பட நான்கு பதின்மவயதினர் கைது
கனடாவின் மொன்றியல் நகரில் உள்ள அஹுன்ட்சிக்-கார்டியர்வில் பகுதியில், திங்கட்கிழமை அதிகாலை நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிக்க முயன்ற குற்றச்சாட்டில் நான்கு பதின்மவயதினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை அதிகாலை 1:45 மணியளவில், புளூரி வீதியில் குரோட் அவென்யூ சந்திப்பிற்கு அருகில் உள்ள நகைக்கடை ஒன்றில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாக அவசர இலக்கமான 911 இற்கு பல அழைப்புகள் கிடைத்துள்ளதாக மொன்றியல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விபரங்களின்படி, சந்தேகநபர்கள் எஸ்.யூ.வி (SUV) ரக சொகுசு வாகனம் ஒன்றைப் பயன்படுத்தி நகைக்கடையின் முன்பக்கக் கண்ணாடியை மோதி உடைத்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் கடைக்குள் இருந்த நகைகளைக் கொள்ளையடிக்க முயன்ற போதிலும், அவர்களது முயற்சி தோல்வியடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர்.
கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, சந்தேகநபர்கள் தாங்கள் கொண்டு வந்த எஸ்.யூ.வி வாகனத்தை நகைக்கடைக்குள்ளேயே கைவிட்டுவிட்டு, மற்றுமொரு வாகனத்தில் ஏறி தப்பியோடியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சாட்சிகள் வழங்கிய விபரங்களின் அடிப்படையில் தப்பியோடிய வாகனத்தை இடைமறித்து சோதனை நடத்தினர்.
இதன்போது வாகனத்தில் இருந்த 18, 17, 16 மற்றும் 13 வயதுடைய நான்கு ஆண் சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவத்தில் அவர்களின் பின்னணி மற்றும் தொடர்பு குறித்து கண்டறிய புலனாய்வாளர்கள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.