இத்தாலியை கதிகலங்க வைத்த 7 பேரை கைது செய்த பிரான்ஸ்
சொந்த நாட்டில் பயங்கரவாத குற்றச்சாட்டில் தண்டனை பெற்றதிலிருந்து தப்பி ஓடிய ஏழு இத்தாலியர்களை பிரான்ஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பிரொன்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தெரிவத்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என்றும் கூறப்படுகின்றபோதும் அவர்களின் விவரங்களை பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் வெளியிடவில்லை.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்கள் இத்தாலியை தளமாகக் கொண்ட தீவிர இடது ஆயுத அமைப்பு மற்றும் கெரில்லா குழுவான Red Brigades-ன் முன்னாள் உறுப்பினர்கள் என கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்களை இத்தாலியிடம் ஒப்படைப்பது குறித்து பிரான்ஸ் நீதிமன்றம் தான் தீர்மானிக்கும் என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gérald Darmanin கூறினார்.
அதேசமயம், சிறைத் தண்டனைகளைத் தவிர்ப்பதற்காக பல ஆண்டுகளாக பிரான்சில் பதுங்கி இருக்கும் தீவிர இடது கெரில்லா குழுக்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை (Emmanuel Macron) இத்தாலி வலியுறுத்தி வருகிறது.
இத்தாலியில் 1960-களின் பிற்பகுதியிலிருந்து 1980-களின் முற்பகுதி வரை சமூக மற்றும் அரசியல் கொந்தளிப்பின் காலகட்டத்தில் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடது போராளி பிரிவுகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு, படுகொலைகள் மற்றும் கலவரங்களால் நூற்றுக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
மேலும் 1978 ஆம் ஆண்டில் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான Aldo Moro -ஐ கடத்தி கொலை செய்தது உட்பட நூற்றுக்கணக்கான கொலைகளுக்கு காரணமான Red Brigades அமைப்பு மிகவும் மோசமானது என்பது குறிப்பிடத்தக்கது.