ஜோர்டானில் இருந்து நுழைய முயன்ற ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது இஸ்ரேல்
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது.
காசா முனை மற்றும் மேற்கு கரை என்று மொத்தம் இரண்டு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. காசா முனையை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகிறது. மேற்குகரை பகுதியின் பாலஸ்தீன அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார். மேற்குகரையின் சில பகுதிகளை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதற்கிடையில், கடந்த வாரம் முதல் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.
இரு தரப்பும் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர். காசா முனையில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் பலரும் உயிரிழந்தனர். இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் கேராளாவை சேர்ந்த சௌமியா என்ற பெண் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
காசா முனையில் 212 பேர் உயிரிழந்தனர். காசாவில் நடத்திவரும் தாக்குதலை தொடர்ந்து அண்டை நாடுகளான சிரியா, லெபனான் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த சில நாட்களாக இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகின்றன. இந்த ராக்கெட்டுகள் இஸ்ரேலை அடையாமலும், ஆளில்லா பகுதிகளில் விழுந்தும் எந்த வித பாதிப்பை ஏற்படுத்தாமல் உள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலின் மற்றொரு அண்டை நாடான ஜோர்டானில் இருந்து இன்று ஆளில்லா விமானம் ஒன்று இஸ்ரேலிய எல்லைப்பகுதிக்குள் நுழைய முற்பட்டது. இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள பைட் ஷீ என்ற பகுதிக்குள் அந்த ஆளில்லா விமானம் நுழைந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் அந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினர்.
சுட்டுவீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானம் எந்த ரகத்தை சேர்ந்தது. அதை ஜோர்டானில் இருந்து அனுப்பியது யார்? என்ற விவரத்தை இஸ்ரேல் தெரிவிக்கவில்லை.