ஜெர்மனி விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது! 4 வயது சிறுமி மீட்பு
விமான நிலையத்திற்குள் துப்பாக்கியை ஏந்தி காரில் வந்த சந்தேகத்திற்குரிய 35 வயது நபர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடைய காரில் இருந்த 4 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் கடந்த 04-11-2023ஆம் திகதி ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் உள்ள விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் உள்ள விமான நிலையத்தில் காரில் வந்த நபர் திடீரென கையில் இருந்த துப்பாக்கியை தூக்கி, வானை நோக்கி 2 முறை சுட்டுள்ளார்.
மேலும், காரில் இருந்து, எரிந்து கொண்டிருந்த 2 பாட்டில்களையும் எடுத்து, தூக்கி வீசியுள்ளார்.
இதனால், பயணிகள், அவர்களின் உறவினர்கள் என அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
இது தொடர்பில் தகவல் அறிந்ததும், பொலிஸார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றனர். இதில், பாதுகாப்பு பகுதியை உடைத்து கொண்டு அந்த வாகனம் சென்றதும், காரில் 2 குழந்தைகள் இருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, விமான சேவை நிறுத்தப்பட்டதுடன், அனைத்து முனையங்களிலும் உள்ள நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் விமான நிறுவனங்களை நேரடியாக தொடர்பு கொள்ளும்படி, விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இந்த நிலையில், ஹேம்பர்க் பொலிஸார் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், காரில் வந்த சந்தேகத்திற்குரிய 35 வயது நபர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
அவருடைய காரிலிருந்த 4 வயது சிறுமி மீட்கப்பட்டார். சிறுமிக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. கைது செய்யும்போது, அந்த நபர் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.