உக்ரைனுக்கு நீண்டகால ஆதரவை வழங்குவதாக ஜெர்மனி உறுதி!
உக்ரைனின் ராணுவத்துக்கு பல மாதங்கள் நீண்டகால ஆதரவை வழங்க ஜெர்மனி உறுதியாகவுள்ளதாக ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா, பிரித்தானியா, செக் குடியரசு மற்றும் நெதர்லாந்து போன்ற நட்பு நாடுகள் தங்கள் தரப்பிலிருந்து உக்ரைனுக்கு வழங்கப்படும் ராணுவ விநியோகங்களை அதிகரித்துள்ளன.
ஆனால் மறுமுனையில் ஐரோப்பிய நாடான ஜெர்மனி, உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்ப மறுத்ததற்காக கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இந்த நிலையில், அடுத்த சில நாட்களில் உக்ரைனுக்கு ஒரு புதிய கனரக ஆயுதங்களை வழங்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஜெர்மனி ஒப்பந்தம் செய்துள்ளது.
மேலும், உக்ரைனின் ராணுவத்துக்கு பல மாதங்கள் மற்றும் ஆண்டுகள் நீடிக்கும் வகையில், நீண்டகால ஆதரவை வழங்க ஜெர்மனி உறுதிபூண்டுள்ளதாக ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி நேற்றைய தினம் (20-04-2022) தெரிவித்துள்ளார்.
“ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போரில் அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானதாக இருக்கும். வரும் வாரங்களில் உள்ள நிலவரமே வெற்றியை முடிவு செய்யும்.
ஆகவே உக்ரைனுக்கு இன்னும் சில தினங்களில் கனரக டாங்கிகள், கவச வாகனங்கள் போன்ற பல ஆயுதங்கள் வழங்கப்படும்” என்று ஜெர்மனி பாதுகாப்புத்துறை மந்திரி இன்று (21-04-2022) தெரிவித்தார்.
மேலும், ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட ‘பேண்சர்ஹாபிட்ஸ்-2000 டாங்கிகள்' இயக்குவதற்கு உக்ரேனிய வீரர்களுக்கு ஜெர்மனி பயிற்சி அளிக்கும் என்றார்.
இந்த டாங்கிகள் தற்போது போதுமான அள்வில் ஜெர்மனியிடம் கையிருப்பு இல்லாததால் நெதர்லாந்தால் அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.