கொடூரமாக கொல்லப்பட்ட இளம் பெண் தொடர்பில் கனேடியரின் பகீர் வாக்குமூலம்
பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவரை 14 ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்த வழக்கில் நபர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
Saskatchewan பிராந்தியத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் நடந்த இந்த கொலை வழக்கில் கடந்த மே மாதம் Eduard Viktorovit Baranec என்பவர் குற்றவாளி என நிரூபணமானது.
இந்த நிலையிலேயே குறித்த நபருக்கு ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2007ல் Saskatchewan பிராந்தியத்தில் ரேடிசன் பகுதிக்கு அருகாமையில் Katelyn Noble என்ற 15 வயது இளம் பெண் மாயமானார்.
2006ல் தமது காதலர் 35 வயதான Greg Friend என்பவருடன் ரேடிசன் பகுதியில் ஒரு குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளனர். குறித்த குடியிருப்பின் ஒருபகுதியில் Baranec என்பவரும் தங்கி வந்துள்ளார்.
Baranec தமக்கு சொந்தமான பண்ணையில் Greg Friend உடன் இணைந்து கஞ்சா பயிரிட்டு, தொழில் செய்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் நண்பர்கள் இருவருக்கும் தொழிலில் கருத்துவேறுபாடு ஏற்பட, Greg Friend மற்றும் அவரது காதலி Katelyn Noble ஆகியோரால் தமக்கு சிக்கல் ஏற்படும் என நம்பியுள்ளார்.
இந்த நிலையில், தமது பண்ணையில் வைத்தே புதர்களுக்கிடையே கத்தியால் Katelyn Noble கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளார். பின்னர் பண்ணையில் ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த குழியில் அவரது உடலை புதைத்துள்ளார்.
ஆனால் பொலிசார் தமது பண்ணையில் தேடி வரக்கூடும் என்ற அச்சம் காரணமாக Katelyn Noble சடலத்தை மறுபடியும் தோண்டி எடுத்து ஆள் நடமாட்டமற்ற புறநகர் பகுதி ஒன்றில் இரண்டாவதாக புதைத்துள்ளார்.
இதுவரை Katelyn Noble சடலம் பொலிசாரால் மீட்க முடியவில்லை. இதனிடையே 2007 ஆகஸ்ட் 16ம் திகதி Katelyn Noble மாயமானதாக கூறி அவரது தாயார் பொலிசாரை நாடியுள்ளார். மட்டுமின்றி ரேடிசன் பகுதிக்கு திரும்பிய அவர், தமது மகளை கண்டுபிடிக்க உதவுமாறு அப்பகுதி மக்களிடமும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் Greg Friend-ஐ கொல்ல இருவரை அனுப்பி வைத்துள்ளார் Baranec. ஆனால் அவர்களிடம் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய Greg Friend, பொலிசாரிடம் நடந்தவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
Katelyn Noble மாயமான விவகாரத்தில் துப்புத்துலங்காமல் தடுமாறிய பொலிசார், ரகசிய நடவடிக்கை மூலம் Baranec இடம் இருந்தே உண்மையை வெளிக்கொண்டு வந்தனர். அதையே அவரது ஒப்புதல் வாக்குமூலமாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
தொடர்ந்து 2018ல் அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. தற்போது விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதுடன், முதல் 10 ஆண்டுகளில் பிணையில் வெளிவருவதற்கும் தடை விதித்துள்ளனர்.