ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் ; எச்சரிக்கும் ட்ரம்ப்
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ம் திகதி தாக்குதல் நடத்தின.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் மசகு எண்ணெய் விலை உயர்ந்தது.

இதையடுத்து, இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 12ம் திகதி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இதனால் இரு தரப்பும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. ஈரான் மீது கடந்த 25ம் திகதி வரை தொடர்ந்து 13 நாட்களாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்தது. இதையடுத்து இரு தரப்பும் கடந்த 26ம் திகதி முதல் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை.
இதனால் மத்திய கிழக்கில் அமைதி திரும்பி இருந்தது. ஆனால் ஜோர்தானில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்த ஏவுகணைகள் அனைத்தும் வான்பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்நிலையில், ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது வலிமையான தாக்குதல் நடத்த அமெரிக்க படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனால் இன்று இரவு ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.