வான்கூவர் கேளிக்கை பூங்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட சிறுமியும் தாயாரும்
மாஸ்க் அணிவது தொடர்பான விவகாரத்தில் வான்கூவர் கேளிக்கை பூங்காவில் இருந்து ஆட்டிஸம் பாதித்த சிறுமியும் அவரது தாயாரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வான்கூவர் Playland கேளிக்கை பூங்காவிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. ஊரடங்கு தொடர்பான உளவியல் நெருக்கடியில் இருந்து விடுபட 7 வயதான சிறுமி Mikayla உடன் தாயார் Bobbie Dube வான்கூவர் Playland கேளிக்கை பூங்காவிற்கு சென்றுள்ளனர்.
Mikayla வாய் பேச முடியாதவர், ஆட்டிஸம் பாதித்தவர், சக்கர நாற்காலியின் உதவி தேவைப்படுபவர். Bobbie Dube வான்கூவர் Playland கேளிக்கை பூங்காவில் அனுமதிச் சீட்டு முன்பதிவு செய்து கொண்ட போது மாஸ்க் தொடர்பில் விசாரித்துள்ளார்.
ஆனால் சிறப்பு அனுமதி அளிக்கப்படும் என நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஒரே ஒரு விளையாட்டு முடிந்த நிலையில், மாஸ்க் அணியாமல் இனி எந்த விளையாட்டிலும் அனுமதிக்க முடியாது என உறுதிபட தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி தற்போதைய சூழலில் சிறப்பு அனுமதி அளிக்க வாய்ப்பில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், நிர்வாகிகள் தரப்பில் மன்னிப்பும் கோரப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா சுகாதாரத்துறை முன்வைத்துள்ள சுகாதார கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது கட்டாயம் என்பதால், தங்களுக்கு வேறு வழியில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் உண்மையில், உடல் நலம் அல்லது உளவியல் பாதிப்பு கொண்டவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் அல்ல என பிரிட்டிஷ் கொலம்பியாவின் சுகாதாரத்துறை விலக்கு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.