சவுதி இளவரசர் வெளியிட்ட அறிவிப்பால் கொண்டாட்டத்தில் இந்தியர்கள்!
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடா விளங்கும் சவுதி அரேபியா கடந்த 15 மாதங்களாகச் சர்வதேச அளவில் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பு மூலம் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்நாட்டில் வருமான வரி விதிக்க அரசு திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியானது.
இந்தக் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகச் சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் செவ்வாய்க்கிழமை ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.
இளவரசர் முகமது பின் சல்மான் அறிவிப்பால் சவுதி மக்கள் மட்டும் அல்லாமல் இந்திய மக்களுக்கும் பட்டாசு வைத்துக் கொண்டாடி வருகின்றனர். அப்படி என்ன தான்டா சொன்னாரு தானே கேட்கிறீங்க.. வாங்க சொல்றேன்.
சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் (Mohammed bin Salman) செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சியின் மூலம் வெளியிட்ட அறிவிப்பின் படி,
அரசு தனிநபர் வருமான வரி விதிக்க எவ்விதமான திட்டமும் இல்லை என்று குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதன் மூலம் மக்களுக்கு வருமான வரி இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
தென் இந்தியாவில் இருந்து அதிகமானோர் சவுதி அரேபியா நாட்டிற்குப் பல தரப்பட்ட பணிகளுக்குச் செல்லும் நிலையிலும், அந்நாட்டில் பல லட்சம் இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையிலும் சவுதி அரசின் இந்த அறிவிப்பு இந்தியர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது. வாங்கும் சம்பளத்தைத் தொடர்ந்து வீட்டு அனுப்ப எந்தப் பாதிப்பும் இருக்காது.
இதுமட்டும் அல்லாமல் இந்த அறிவிப்பில் கூடுதலாகக் கடந்த வருடம் ஜூலை மாதம் விதிக்கப்பட்ட 3 மடங்கு மதிப்புக் கூட்டு வரியான 15 சதவீதமும் தற்காலிகமானது என விளக்கம் அளித்துள்ளார் சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான்.
கடந்த வருடம் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்யச் சவுதி அரசு தனது மதிப்புக் கூட்டு வரியை 3 மடங்கு உயர்த்தியது.
கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு உள்ள நேரத்தில் அரசு உதவி செய்ய வேண்டிய சூழ்நிலையில் அரசு வரியை அதிகரித்துள்ளது சாமானிய மக்கள் முதல் பணக்காரர்கள், தொழிற்துறை நிறுவனங்கள் என அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சி அளித்தது.
வாட் வரியை அதிகரித்துச் சவுதி மக்களைப் பாதிக்கும் என்பது தெரியும், ஆனால் நாட்டை வளமாகவும், தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.
இதன் வாயிலாகவே வாட் வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது எனச் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.
மேலும் 15 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ள வரி ஒரு வருடமும் முதல் 5 வருடம் வரையில் இருக்கும், அதன் பின்பு இதன் அளவீடு நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்ப 10 சதவீதம், 5 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று, இது தற்காலிக நடவடிக்கை என்பதை இளவரசர் முகமது பின் சல்மான் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார் .