பிரான்ஸில் தொலைக்காட்சி பயனாளருக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்
பிரான்ஸில் இந்த ஆண்டு தொலைகாட்சி உரிமக் கட்டணத்தை நீக்குவது உள்ளிட்ட சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள நிலையில் இந்த வாரம் முதல் கட்டணத்தை மீளப்பெற முடியும்.
அதற்கமைய, செவ்வாய்கிழமை முதல் பிரான்ஸில் ஆறு மில்லியன் மக்கள் தங்கள் தொலைகாட்சி உரிமக் கட்டணங்களைத் திரும்பப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன் 23 மில்லியன் குடும்பங்கள் இனி ஒவ்வொரு வருடமும் 138 யூரோக்களை சேமிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஒக்டோபர் மாதம் வரை தொலைகாட்சி உரிமைக் கட்டணம் செலுத்திய 6.2 மில்லியன் குடும்பங்கள் 6ஆம் திகதி முதல் பணத்தை மீளப்பெற தகுதி உடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 20 சதவீதமான மக்கள் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் இந்த கட்டணத்தை மீளப்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பெற்றுக் கொண்ட திகதிக்கமைய மீளப்பெறும் மாதங்களில் மாற்றங்கள் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் வருடாந்தம் வீட்டு வரியுடன் சேர்த்து அறவிடப்படுகின்ற தொலைக்காட்சி உரிம வரியை நீக்குவதற்கு கடந்த மாதம் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை ஈடுசெய்வதற்கான அரசு உதவிகளை உள்ளடக்கிய நிதிச் சட்ட மூலத்தின் மீதான விவாதங்களின் போது இந்தத் தொலைக்காட்சி வரி நீக்கச் சட்டநகல் அதன் முதல் வாசிப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரான்ஸின் வீடுகளில் தொலைக்காட்சி பயன்படுத்துவதற்கான உரிம வரியாக ஆண்டு தோறும் 138 யூரோக்கள் அறவிடப்படுகின்றது. புதிய சட்டத்தின் மூலம் சுமார் 85 வீதமான வீடுகளுக்கு உரிம வரி நீக்கப்படவுள்ளது.
இதன் மூலம் அரசுக்கு 3.2 பில்லியன் யூரோக்கள் இழப்பு ஏற்படும். உரிம வரி இழக்கப்படுவதால் பொது ஒலி-ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு இழப்பீடுகளை வழங்கும் என அறிவித்துள்ளது.
வீட்டு வரியுடன் சேர்த்து தொலைக்காட்சி ஊடகங்களுக்கான வரியையும் நீக்கப்போவதாக ஜனாதிபதி மக்ரோன் தேர்தலின் போது வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி வீட்டு வரி அண்மைய ஆண்டுகளில் படிப்படியாகக் குறைக்கப்பட்டு நீக்கப்பட்டுள்ளது. அதே போன்று தொலைக்காட்சி வரியும் இல்லாதொழிக்கப்படுகிறது.