கனடாவின் உயரிய பதவிக்கு பூர்வக்குடி பெண்மணி தெரிவு
கனடவின் 30வது கவர்னர் ஜெனரலாக பூர்வக்குடி பெண்மணி ஒருவர் முதன்முறையாக பொறுப்பேற்றுள்ளார்.
ஒவ்வொரு கனேடியரையும் தாம் சந்திக்க இருப்பதாகவும், அவர்களின் கவலைகளைப் புரிந்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் கனேடிய தூதரக அதிகாரியான Mary Simon என்பவரே, கனடாவின் 30வது கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றுள்ளார்.
கனடாவின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்கும் ஐந்தாவது பெண்மணி இவர். கனேடிய வரலாற்றில் பூர்வக்குடி மக்களுக்கு எதிரான முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவர தாம் முயற்சி மேற்கொள்ள இருப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
மட்டுமின்றி சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட பூர்வக்குடி மாணவர்களின் அடையாளப்படுத்தப்படாத கல்லறைகள் தொடர்பிலும் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவுக்கு பிரித்தானிய ராணியாரின் பிரதிநிதியாக Mary Simon செயல்பட உள்ளார். கடந்த ஜனவரியில் Julie Payette பதவி விலகிய நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்த பொறுப்புக்கு Mary Simon பெயரை பரிந்துரைத்திருந்தார்.
கொரோனா கட்டுப்பாடுகளை அடுத்து பிரதமர் ட்ரூடோ உட்பட 44 பேர்கள் மட்டுமே மேரி சைமன் பதவியேற்பு விழாவில் பங்கேற்றிருந்தனர்.
இதனிடையே, மேரி சைமனால் சரளமாக பிரஞ்சு பேச இயலாமை பற்றி 400 புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதனிடையே, மேரி சைமன் தமது பதவி காலத்தில் கனடாவின் இரண்டு உத்தியோகபூர்வ மொழிகளிலும் கனடியர்களை பிரதிநிதித்துவப்படுத்துவார் என ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.