பிரதமர் ட்ரூடோ மீது கல் வீசியவர் கைது
லண்டனில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த பிரதமர் ட்ரூடோ மீது கல் வீசிய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை சுமார் 6 மணியளவில் ஒன்ராறியோவின் லண்டனில் பரப்புரையில் ஈடுபட்டு, பின்னர் தமது வாகனத்திற்கு திரும்பிய பிரதமர் ட்ரூடோ மீது கல் வீசினர். இச்சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் ட்ரூடோ காயமின்றி தப்பினார். தம்மீது கல் விசப்பட்டது உண்மை என கூறிய ட்ரூடோ, இச்சம்பவத்தை பொலிசாரிடம் விட்டுவிடுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் விசாரணையை முன்னெடுத்த பொலிசார், செயின்ட் தாமஸ் பகுதி குடியிருப்பாளரான 26 வயது ஷேன் மார்ஷல் என்பவரை கைது செய்துள்ளனர்.
ஆயுதத்தால் தாக்கியது தொடர்பாக அவர் மீது ஒரு பிரிவில் வழக்கு பதியப்பட்டுள்ளது. சனிக்கிழமை அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ள பொலிசார், அடுத்து அக்டோபர் மாதம் நீதிமன்ற விசாரணைக்கு அவர் உட்படுத்தப்படுவார் என தெரிவித்துள்ளனர்.
கனடா மக்கள் கட்சி நிர்வாகிகளில் ஒருவரான ஷேன் மார்ஷல் தற்போது அவரது கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.