ஸ்மார்ட் போனால் நடுவானில் பெரும் களேபரம்; அலறியடித்த விமான ஊழியர்கள்
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் கடந்த திங்கட் கிழமை மாலை நியூ ஆர்லின்சில் இருந்து சியாட்டை நோக்கி வந்து கொண்டிருந்தபோது நடுவானில் விமானி ஒருவர் திடீரென அலற ஆரம்பித்தார்.
இதனையடுத்து பயணிகள் பதற்றமான நிலையில், சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த Air Hostess-ம் அதிர்ச்சியில் கத்த ஆரம்பித்தார். அப்போது தான் என்ன நடக்கிறது என்பது மற்ற பயணிகளுக்குப் புரிந்தது.
அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவரின் சாம்சங் கேலக்ஸி ஏ 21 போன் திடீரென வெடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து விமானம் மிக அவசரமாகத் தரையிறக்கப்பட்டதுடன் விமானத்தில் இருந்த 128 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இது தொடர்பாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் வெளியிட்ட தகவலில்,
விமானத்தின் குழுவினர் பேட்டரி கன்டெய்ன்மென்ட் போன்ற தீயை அணைக்க பயன்படுத்தும் கருவிகளைக் கொண்டு உடனடியாக தீயை அணைத்துவிட்டதனால் எந்த பயணிக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்த நேரத்தில் ஸ்மார்ட் போன் வெடித்து எரிந்த சம்பவத்தால், பயணிகள் அனைவரும் பயத்தின் உச்சிக்கே சென்று விட்டார்கள். இது தொடர்பாகப் பேசிய பயணி ஒருவர்,
''திடீரென அலறல் சத்தம் கேட்டது. என்னவென்று பார்ப்பதற்குள் போன் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடத்தில் எங்கள் இதயத்துடிப்பே நின்று விட்டது'' என அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் குறித்து சாம்சங் நிறுவனம் எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்காதது வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.