மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: கனடிய பெண் பலி
மெக்சிகோவின் உலகப் புகழ்பெற்ற தியோதிஹுவாகன் தொல்பொருள் தளத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் கனடிய பெண் ஒருவர் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக மெக்சிகோ பாதுகாப்பு அமைச்சரவை தெரிவித்துள்ளது.
மெக்சிகோ நகருக்கு வடகிழக்கே 30 மைல் தொலைவில் உள்ள யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இந்த சுற்றுலாத் தலத்தில் உள்ள 'நிலா பிரமிடு' அருகே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

ஒரு நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் கனடா நாட்டுப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் பலர் காயமடைந்தனர். சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோக்களில், துப்பாக்கிச் சத்தம் கேட்டவுடன் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடுவதைக் காண முடிகிறது.
இந்தச் சம்பவத்தில் தனது நாட்டு குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டதையும், மற்றொருவர் காயமடைந்ததையும் கனடா வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள கனடா, மெக்சிகோ அரசாங்கம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் (Claudia Sheinbaum), "தியோதிஹுவாகனில் இன்று நடந்த சம்பவம் எங்களை ஆழமாக காயப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் கனடா தூதரகத்துடன் தொடர்பில் இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.