பள்ளி மாணவர்களின் வாயை டேப் கொண்டு மூடியதனால் எழுந்துள்ள சர்ச்சை
கனடாவின் கியூபெக் மாகாண பாடசாலையொன்றில் ஆரம்ப பள்ளியில் பயிலும் சில மாணவர்களின் வாயை டேப் கொண்டு மூடிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தரம் 1 மற்றும் தரம் 2 மாணர்கள் சிலரது வாய்கள் இவ்வாறு மூடப்பட்டுள்ளது. அதிக சத்தமிட்டு பேசிய காரணத்தினால் பாடசாலை நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் பிள்ளைகளின் வாய்களை மூடியுள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்த பெற்றோர் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான ஓர் தகவலை எந்தவொரு பெற்றோரும் செவிமடுக்க நேரிடக்கூடாது என ஒரு மாணவரின் பெற்றோரான ரொப்யான் ரிட்யார்ட் தெரிவித்துள்ளார்.
மொன்ட்ரயலுக்கு வடக்கே 80 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஜொலிட்டி ஆரம்ப பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இடைவேளையின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உணவு விநியோக மேற்பார்வையாளர் மாணவர்களிடம் நகைச்சுவையாக வாய்களை மூடுவதாக கூறியதாகவும், டேப் ஒன்றை மாணவர்களின் முகத்தில் விளையாட்டாக வைத்ததாகவும் பாடசாலை அதிபர் டேன் ட்ராம்ப்லே தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் இந்த சம்பவம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல எனவும் இவ்வாறான சம்பவங்கள் இனி இடம்பெறாமல் இருப்பதனை உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.