இஸ்ரேலிய காவலில் வைக்கப்பட்டிருந்த ஹமாஸ் நிறுவனர் விடுவிப்பு
இஸ்ரேலிய காவலில் வைக்கப்பட்டிருந்த ஹமாஸ் அமைப்பின் இணை நிறுவனர்களில் ஒருவரான ஹஸன் யூசுப் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹஸன் யூசுப் , மகனை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
71 வயதான யூசுப், கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் எவ்வித விசாரணைகளுமின்றி இஸ்ரேலால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

1980களில் ஷேக் அஹ்மத் யாசின் மற்றும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பைச் சேர்ந்த பிற பாலஸ்தீனிய உறுப்பினர்களுடன் இணைந்து ஹமாஸ் அமைப்பை நிறுவிய அவர், மேற்குக்கரையின் மூத்த ஹமாஸ் தலைவர்களில் ஒருவராவார்.
கடந்த பல வருடங்களாக இஸ்ரேலிய காவல்துறையினரால் பலமுறை கைது செய்யப்பட்டுள்ள ஹஸன் யூசுப், இறுதியாக 16 மாத கால நிர்வாகத் தடுப்புக் காவலுக்குப் பின்னர் கடந்த 2020 ஜூலை மாதம் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.