ஜேர்மனியில் புகலிடம் மறுக்கப்பட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
ஜேர்மனியில் புகலிடம் மறுக்கப்பட்டவர்கள் நாட்டில் தொடர்ந்தும் தங்கி வாழ வாய்ப்பளிக்கப்படவுள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் மூலம் ஜேர்மனியில் “Duldung” என்னும் சட்டபூர்வமற்ற வதிவிட அனுமதியை வைத்திருக்கின்ற சுமார் ஒரு லட்சம் பேர் பயனடைவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் நான்ஸி ஃபேசர் (Nancy Faeser) நாட்டின் வதிவிட உரிமைக்கான புதிய சட்டப் பிரேரணை ஒன்றை விரைவில் சமர்ப்பிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்.
ஜந்து வருடங்கள் அல்லது அதற்கு மேல் சகிப்புத்தன்மையுடன் நாட்டில் வசிக்கின்ற புலம்பெயர்ந்த வர்களுக்கு நிரந்தரமாக-சட்டபூர்வமாகத்- தங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும் புகலிடம் நிராகரிக்கப்பட்டவர்களில் சட்டத்துக்குட்பட்டு நடக்காத புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்து வதில் தொடர்ந்து கடும் போக்குக் கடைப்பிடிக்கப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
புதிய வதிவிடச் சட்டத்தின் படி புகலிடம் மறுக்கப்பட்ட பிறகும் சகிப்புத்தன்மையுடன் நாட்டில் ஐந்து ஆண்டுகள் வசித்தவர்களுக்கு முதலில் ஒரு வருட தகுதிகாண் குடியிருப்பு அனுமதி தரப்படும் என்றும், அக்காலப் பகுதியில் அவர்கள் ஜேர்மனிய மொழியில் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்பவர்களாக இருத்தல் அவசியம். அவ்வாறானவர்களுக்குப் பின்னர் நாட்டில் சட்டபூர்வமாக, நிரந்தர மாகத் தங்குவதற்கான உரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.
அதேவேளை தங்களைப் பற்றிய தவறான தகவல்களை வழங்கிய புலம்பெயர்ந்த வர்கள் மற்றும் குற்றச் செயல்களில்ஈடுபட்டவர்கள் இந்த வாய்ப்பில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் “சமிக்ஞை விளக்கு”க் கூட்டணி(traffic-light’ coalition) அரசு அதன் கூட்டணி உடன்படிக்கையில் ஏற்கனவே உறுதி அளித்திருந்த குடியேற்ற வாசிகள் தொடர்பான கொள்கைக்கு அமையவே இந்தப் புதிய வதிவிட அனுமதிச் சட்ட வரைபு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.