கனடாவில் வெறுப்பை உமிழும் வாசகம்; இந்தியா கண்டனம்!
கனடாவின் வின்ட்சார் நகரில் உள்ள இந்துக் கோவில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதோடு கோவிலின் வெளிப்புற சுவரின் மீது கருப்பு மை தெளித்து, இந்துவுக்கு எதிரான மற்றும் இந்தியாவுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
சம்பவத்தில் தொடர்பில் 2 பேர் தேடப்பட்டு வருகின்றதாக வின்ட்சார் நகர பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றிரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணிக்குள் நடந்திருக்கக் கூடும் என வின்ட்சார் நகர பொலிசார் தெரிவித்தனர்.
சுவற்றில் எழுதும் வீடியோ காட்சிகள்
இதுகுறித்து வெளியான வீடியோவில், முழுவதும் கருப்பு உடையில், முகங்களை மூடியபடி 2 பேர் வருகின்றனர். அவர்களில் ஒருவர் தொலைவில் நின்றபடி யாரேனும் வருகிறார்களா என கவனித்தபடி நிற்கிறார். மற்றொருவர் சுவற்றில் கருப்பு மை கொண்டு எழுதும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் இந்து கோவில் அவமதிக்கப்பட்ட செயலுக்கு கனடாவில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் கடந்த ஜனவரி மாத இறுதியில், கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கவுரி சங்கர் கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தமைக்கு டொரண்டோ நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது.
அதேவேளை ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மில் பார்க் என்ற இடத்தில் சுவாமி நாராயண் இந்து கோவில் மீது கடந்த ஜனவரி 12-ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் அதில் எழுதி இருந்தமை பரபரப்பை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.